மெக்சிகோ நாட்டின் கபோ சான் லூகாஸ் கடற்கரை பகுதியில் ஆழ்கடலில் வாழும் அரிய வகை ஓர்ஃபிஷ் மீன்கள் கரைக்கு மிக அருகில் உயிருக்கு போராடிய நிலையில் தென்பட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலக அழிவு மீன்கள் என்று அழைக்கப்படும் இவை பொதுவாக கடல் மட்டத்திற்கு கீழே பல ஆயிரம் அடி ஆழத்தில் வாழக்கூடியவை என்பதால் இவை கரைக்கு வருவது மிகவும் அரிதான ஒன்றாகக் கருதப்படுகிறது.

 

கடற்கரையில் இருந்த இரண்டு சகோதரிகள் தண்ணீரில் ஏதோ மின்னுவதைக் கண்டு அருகில் சென்றபோது இந்த நீண்ட ரிப்பன் போன்ற உடலமைப்பைக் கொண்ட மீன்கள் ஆழமற்ற நீரில் தத்தளிப்பதைக் கண்டனர்.

உடனடியாக அந்தப் பெண்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் துணிச்சலுடன் செயல்பட்டு அந்த மீன்களை மீண்டும் ஆழ்கடலுக்குள் பாதுகாப்பாக வழிநடத்திச் சென்ற நெகிழ்ச்சியான காட்சிகள் இணையத்தில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் மீனவர்களால் துடுப்பு மீன் என்று அழைக்கப்படும் இந்த மீன்கள் கரைக்கு வருவது நிலநடுக்கம் அல்லது சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களுக்கான அறிகுறி என்று ஒரு தரப்பினர் அச்சம் தெரிவித்து வருகின்றனர். சுமார் முப்பது அடி நீளம் வரை வளரக்கூடிய இந்த எலும்பு மீன்கள் தென்படுவதை ஒரு கெட்ட சகுனமாகப் பார்க்கும் வழக்கம் உலக அளவில் சில பகுதிகளில் நிலவுகிறது.

இருப்பினும் இந்த மீன்களின் வருகைக்கும் நிலநடுக்கங்களுக்கும் நேரடித் தொடர்பு இருப்பதற்கான முறையான அறிவியல் ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர். ஆபத்தானதாக இருக்கலாம் என்ற அச்சத்தையும் மீறி அரிய வகை கடல் வாழ் உயிரினத்தைக் காப்பாற்ற அந்தப் பெண்கள் காட்டிய மனிதாபிமானத்தைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.