டி20 உலகக்கோப்பையை மூன்றாவது முறையாக வென்று இந்திய அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கட்டமைப்பு மற்றும் முன்னாள் வீரர்களைக் கையாளும் விதம் குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் புகழாரம் சூட்டியுள்ளார்.

இது குறித்து யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய அக்தர், “இந்திய அணி சரியான பாதையில் சிந்தித்து வருகிறது. சரியான நபர்களுக்கு, சரியான நேரத்தில் வாய்ப்புகளை வழங்கி வருவதே அவர்களின் வெற்றிக்கு முக்கியக் காரணம். இந்திய கிரிக்கெட் வளர்ந்து வரும் வேகம், அவர்கள் கட்டமைப்பில் முதலீடு செய்யும் முறை மற்றும் குறிப்பாக, தங்கள் நாட்டு மூத்த கிரிக்கெட் வீரர்களுக்கு அவர்கள் அளிக்கும் மரியாதை ஆகியவை பாராட்டுக்குரியவை,” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியா உலகக்கோப்பையை வென்ற தருணத்தில், இதுவரை உலகக்கோப்பையை வென்ற இந்திய கேப்டன்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதை அக்தர் சுட்டிக்காட்டினார். “இந்தியர்கள் தங்கள் நாட்டு ஜாம்பவான்களை எவ்வளவு அழகாக மதிக்கிறார்கள் என்பதை பாருங்கள். அவர்களது ஒற்றுமை வியக்க வைக்கிறது,” என்று அவர் குறிப்பிட்டார்.

மறுபுறம், பாகிஸ்தான் கிரிக்கெட்டில் முன்னாள் வீரர்களுக்குக் கிடைக்கும் மரியாதை மற்றும் ஆதரவு குறித்துக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. அரசியல் தலையீடுகள் மற்றும் முறையான நிறுவன ஆதரவு இல்லாதது பாகிஸ்தான் கிரிக்கெட்டைப் பின்தங்கிய நிலைக்குத் தள்ளியுள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, உலகக்கோப்பையை வென்று தந்த பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான் இம்ரான் கான் சிறையில் இருப்பது உள்ளிட்ட நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடுகள் மீது கடும் அதிருப்தி நிலவுகிறது.

மேலும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், நியூசிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி கோப்பையைத் தக்கவைத்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்களில் 255/5 ரன்களைக் குவித்தது. பின்னர் பந்துவீச்சில் ஜஸ்ப்ரீத் பும்ரா 4 விக்கெட்டுகளை (15 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து) வீழ்த்தி, நியூசிலாந்து அணியின் சரிவுக்கு முக்கியக் காரணமாகத் திகழ்ந்தார்.