பீகார் மாநிலம் சிவான் ரயில் நிலையத்தில் உள்ள பயணிகள் தகவல் திரையில், திடீரென ஆபாசமான பாடல் ஒன்று அதிக சத்தத்துடன் ஒலிபரப்பப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில் நிலையத்தில் பெண்கள், குழந்தைகள் என ஏராளமான பயணிகள் இருந்த நேரத்தில், பொது இடத்தில் இது போன்ற அநாகரீகமான வீடியோ வெளியானதால் பயணிகள் முகம் சுளித்தனர்.

இந்தச் சம்பவத்தை அங்கிருந்த சிலர் தனது செல்போனில் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பகிர, அந்த வீடியோ தற்போது காட்டுத்தீயாக பரவி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ரயில்வே நிர்வாகம் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.

“>

இது குறித்து தகவல் அறிந்ததும் ரயில்வே அதிகாரிகள் உடனடியாக விசாரணையைத் தொடங்கினர். எல்இடி திரைகளை நிர்வகிக்கும் தனியார் நிறுவனத்தின் மெத்தனமே இதற்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தப் பாதுகாப்பு குறைபாடு மற்றும் அநாகரீகச் செயலில் ஈடுபட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பீகாரின் பாட்னா ரயில் நிலையத்தில் இது போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்த நிலையில், மீண்டும் சிவானில் இது தொடர்வது பயணிகளிடையே பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.