உத்தரப்பிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு தொடக்கப் பள்ளியில், சத்துணவு திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு வழங்கப்படும் பாலில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், வெறும் ஒரு பக்கெட் தண்ணீரில் இரண்டே இரண்டு அரை லிட்டர் பால் பாக்கெட்டுகளை மட்டும் ஊற்றி, அதை அப்படியே குழந்தைகளுக்கு விநியோகம் செய்யும் அதிர்ச்சி காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

திக்வாஹா தொடக்கப் பள்ளியில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவை பார்த்த பெற்றோர்களும், பொதுமக்களும், குழந்தைகளின் ஊட்டச்சத்தில் பள்ளி நிர்வாகம் விளையாடுவதாகக் கூறி கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.

அதே பள்ளியில் எடுக்கப்பட்ட மற்றொரு வீடியோவில், தலைமை ஆசிரியை பள்ளி நேரத்திலேயே குறட்டை விட்டுத் தூங்குவதும் அம்பலமாகியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியைக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு தரமான உணவு வழங்கப்பட வேண்டிய திட்டத்தில் இப்படி ஒரு அநியாயம் நடந்திருப்பது அம்மாநிலத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.