உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில், காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் தலைமைக் காவலர் மற்றும் பெண் காவலர் ஒருவரின் அநாகரீகமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, இருவரையும் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து மாவட்ட எஸ்.பி. அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

அதாவது ஒரு காவல் நிலையத்தில் ஒரு தலைமைக் காவலரும், பெண் காவலர் ஒருவரும் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும் எல்லை மீறி நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்று அண்மையில் இணையத்தில் வெளியானது. குறிப்பாக, அந்த வீடியோவில் பெண் காவலர் சீருடையுடன் இருப்பது, காவல் துறையின் ஒழுக்கம் மற்றும் சேவை விதிகள் குறித்த பலத்த கேள்விகளை எழுப்பியது.

இந்த வீடியோ குறித்து அதிகாரப்பூர்வமான உறுதிப்படுத்தல் இன்னும் கிடைக்கவில்லை என்றாலும், இது துறையின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி காவல்துறை நிர்வாகம் உடனடியாக விசாரணையில் இறங்கியது.

 

இந்த விவகாரம் குறித்து பிஜ்னோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) அபிஷேக் ஜா கூறுகையில், “முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், ஒழுக்கமற்ற செயலில் ஈடுபட்ட அந்தத் தலைமைக் காவலர் மற்றும் பெண் காவலர் ஆகிய இருவரையும் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாகத் துறை ரீதியான விசாரணைக்கும் ஆணையிடப்பட்டுள்ளது,” என்றார்.

காவல்துறையில் கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கம் மிக முக்கியமானது என்றும், சீருடையின் கண்ணியத்திற்குக் குறைவு ஏற்படும் வகையில் நடப்பவர்கள் மீது எவ்வித சமரசமும் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். மேலும் இது தொடர்பாக விசாரணை நடைபெறும் நிலையில் வீடியோவின் உண்மை நிரூபிக்க பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.