இன்ஸ்டாகிராம் காதலால் ஒரு பிஞ்சு உயிர் பறிபோயிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் வசிக்கும் ஒரு திருமணமான பெண்ணுக்கும், பிஞ்சூரைச் சேர்ந்த கோபால் என்பவனுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது.

அந்தப் பெண்ணின் ஒரு வயது மகன் ரேயான்ஷ், தங்களது உறவுக்குத் தடையாக இருப்பதாகக் கருதிய கோபால், அந்தக் குழந்தையைத் தீர்த்துக்கட்டத் திட்டம் தீட்டினார்.

கடந்த சனிக்கிழமை, குழந்தை இருந்த காப்பகத்திற்குச் சென்ற கோபால், அங்கிருந்தவர்களிடம் தான் குழந்தையின் தந்தை என்று பொய் சொல்லி குழந்தையைத் தூக்கிச் சென்றார்.

பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்குச் சென்று குழந்தையைக் கொடூரமாகக் கொலை செய்து, ஒரு கோணிப்பையில் கட்டி சுகோமாஜிரி பைபாஸ் அருகே வீசிவிட்டுத் தப்பியுள்ளார்.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கோபாலைத் தட்டித்தூக்கிய போலீசார், குழந்தையை மீட்டபோது அது சடலமாக இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

3 நாட்களுக்கு முன்புதான் குழந்தையின் முதலாவது பிறந்தநாளைக் கோலாகலமாகக் கொண்டாடிய நிலையில், இந்தக் கொடூரம் நடந்துள்ளது. இதில் தாய்க்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.