ரயிலின் பொதுப் பெட்டியில் பயணம் செய்பவர்களுக்குத் தெரியும், அங்கு சீட் பிடிப்பது எவ்வளவு பெரிய சவால் என்று! சில பயணிகள் தனியாக அமர்ந்து கொண்டு, தனது பேக் அல்லது உறவினர்கள் வரப்போகிறார்கள் என்று சொல்லி பக்கத்து சீட்டுகளில் யாரையும் அமர விடாமல் அடம் பிடிப்பார்கள்.
அப்படியான ஒரு சூழலில், பொதுப் பெட்டிக்குள் நுழைந்த போலீஸ்காரர் சந்தோஷ் பண்டிட்ராவ் ஜெய்பாயே, அங்கு ஒரு முதியவர் தவிப்புடன் நின்று கொண்டிருப்பதை கவனித்தார்.
View this post on Instagram
உடனே ஆக்ரோஷமான அந்த போலீஸ்காரர், சீட்டை ஆக்கிரமித்து அமர்ந்திருந்தவர்களிடம், “இங்கே இடமிருந்தும் ஏன் அவரை நிற்க வைக்கிறீர்கள்? அவர் உங்கள் தந்தை வயதுடையவர், கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லையா?” எனச் சத்தமிட்டார்.
மேலும், “பொதுப் பெட்டியில் தேவையில்லாமல் இடத்தை ஆக்கிரமிப்பது சட்டப்படி குற்றம். உங்களை இப்போதே ரயிலில் இருந்து இறக்கி வழக்குப் பதிவு செய்ய முடியும், ஜாக்கிரதை!” என எச்சரித்தார்.
போலீஸ்காரரின் மிரட்டலான பேச்சைக் கேட்டதும், சீட்டில் பேக் வைத்து ஆக்கிரமித்தவர்கள் உடனே பைகளை எடுத்துவிட்டு அந்த முதியவரை அமர வைத்தனர். ‘பேக்குகளுக்கு இல்லை, மனிதர்களுக்கு இடம் கொடுங்கள்’ என அவர் பேசிய வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் பலரின் மனங்களை வென்றுள்ளது.
