நிஜத்தில் பாம்புகள் தங்கள் இனப்பெருக்க உறுப்பான ‘குளோகா’ (Cloaca) மூலமாகவே முட்டையிடுகின்றன என்றாலும், சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், பாம்பு ஒன்று தனது வாயின் வழியாக அடுத்தடுத்து 5 முதல் 6 முட்டைகளை வெளியே தள்ளும் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
— Wildlife Uncensored (@TheeDarkCircle) December 24, 2025
இதைக் கண்ட பலரும் பாம்புகள் வாயால் தான் முட்டையிடுகின்றனவோ என்று வியப்படைந்த நிலையில், உண்மையில் அது முட்டையிடும் நிகழ்வு அல்ல; மாறாக, தான் திருடி விழுங்கிய முட்டைகளை அந்தப் பாம்பு மீண்டும் கக்கி வெளியேற்றும் ‘வாந்தி’ எடுக்கும் செயல்முறையாகும்.
இரை விழுங்கிய பிறகு ஆபத்தை உணர்ந்தாலோ அல்லது உடல் எடை அதிகமாகி தப்பிக்க சிரமப்பட்டாலோ பாம்புகள் இவ்வாறு உணவை வெளியேற்றும் இயல்புடையவை. சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துள்ள இந்த வீடியோ, இயற்கையின் விசித்திரத்தை உணர்த்துவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
