காங்கோ ஜனநாயகக் குடியரசின் கின்டு விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர் காங்கோ நிறுவனத்தின் விமானத்தில், பல மணிநேரக் காத்திருப்புக்குப் பிறகு பயணிகள் விமானத்தின் வாசலில் இருந்து தரைக்குக் குதித்து வெளியேறிய அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது.

போயிங் 737-800 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானம் கின்டு நகரை வந்தடைந்தும், பயணிகளை இறக்கிவிடுவதற்குத் தேவையான நகரும் படிக்கட்டுகள் நீண்ட நேரமாக வழங்கப்படவில்லை. இதனால் மூச்சுத்திணற வைக்கும் வெப்பத்தில் பல மணிநேரம் விமானத்திற்குள்ளேயே சிக்கித் தவித்த பயணிகள், வேறு வழியின்றி சுமார் 10 அடி உயரத்தில் உள்ள விமானத்தின் பிரதானக் கதவைத் திறந்து ஒவ்வொன்றாகக் கீழே குதித்தனர்.

 

கையில் தங்களது உடைமைகளைச் சுமந்தபடி, அங்கிருந்த ஊழியர்களின் உதவியுடன் பயணிகள் கீழே குதிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி உலக நாடுகளிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அடிப்படை உள்க்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் பயணிகளின் பாதுகாப்பை அடகு வைக்கும் இத்தகையச் செயல்கள், சர்வதேச விமானப் போக்குவரத்து விதிகளுக்கு எதிரானது என்று சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.