பெங்களூருவைச் சேர்ந்த நபர் ஒருவர் ஓடும் ரயிலுக்குள் தடையின்றி சிகரெட் பிடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சக பயணிகள் அவரிடம் தட்டிக்கேட்டபோது, சற்றும் பயமின்றி “நான் ஒரு ரயில்வே ஊழியர், என்னால் எதையும் செய்ய முடியும், உங்களால் முடிந்ததைப் பார்த்துக் கொள்ளுங்கள்” எனத் திமிராகப் பதிலளித்துள்ளார்.

பொது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் அவர் பேசிய இந்தப் பேச்சு, வீடியோவாகப் பதிவாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, ரயில்வே சேவை மையம் (Railway Seva) அதிகாரப்பூர்வமாகப் பதிலளித்துள்ளது. அந்த நபரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க ஏதுவாக, சம்பவம் நடந்த தேதி, ரயில் எண் மற்றும் பிஎன்ஆர் (PNR) விவரங்களைப் பகிருமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

இதற்கிடையே, “இவரைப் போன்றவர்களுக்கு வழங்கப்படும் இலவச ரயில் டிக்கெட் சலுகைகளை ரத்து செய்ய வேண்டும்” என்றும், “இவர் விரைவில் ரயில்வேயின் முன்னாள் ஊழியராகிவிடுவார்” என்றும் நெட்டிசன்கள் கிண்டலாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.