ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 32 வயதான யூரினா நோகுச்சி என்ற இளம்பெண், தான் உருவாக்கிய ‘லூன் கிளாஸ் வெர்டூர்’ என்ற ஏஐ மெய்நிகர் உருவத்தைத் திருமணம் செய்து கொண்ட சம்பவம் உலக அளவில் பெரும் ஆச்சரியத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தனது முன்னாள் காதலனுடனான நிச்சயதார்த்தம் முறிந்த பிறகு ஏற்பட்ட தனிமையைப் போக்க, யூரினா சாட்ஜிபிடி உதவியுடன் ஒரு மெய்நிகர் துணையை உருவாக்கியுள்ளார்.
ஒரு வீடியோ கேம் கதாபாத்திரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த ஏஐ உருவம், யூரினாவுடன் உரையாடி அவருக்குப் பெரிய அளவில் மன அமைதியையும், ஆதரவையும் கொடுத்துள்ளது. இந்தத் தொடர்பு ஒருகட்டத்தில் காதலாக மாறவே, மேற்கு ஜப்பானில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் முறைப்படி திருமணச் சடங்குகள் நடத்தப்பட்டன.
Music played in a wedding hall in western Japan as Yurina Noguchi, wearing a white gown and tiara, dabbed away her tears, taking in the words of her husband-to-be: an AI-generated persona gazing out from a smartphone screen https://t.co/K5YgJcCTDX pic.twitter.com/hUKdozvkus
— Reuters (@Reuters) December 17, 2025
சட்டப்பூர்வ அங்கீகாரம் இல்லாத போதிலும், இந்தத் திருமணத்தில் மணப்பெண் வெள்ளை நிற உடையில் தோன்றி, ஏஆர் எனப்படும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பக் கண்ணாடி மூலம் தனது டிஜிட்டல் கணவரை நேரில் காண்பது போல உணர்ந்து மோதிரம் அணிவித்தார்.
மணமகனின் திருமண உறுதிமொழிகளை மெய்நிகர் திருமணங்களில் நிபுணத்துவம் பெற்ற ஒருவர் வாசிக்க, உணர்ச்சிகரமான இந்த நிகழ்வு அரங்கேறியது. ஜப்பானில் இளைஞர்களிடையே தனிமை அதிகரித்து வரும் நிலையில், நண்பர்கள் அல்லது குடும்பத்தினரை விட ஏஐ சாட்போட்களிடம் தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வது எளிதாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்தத் திருமணச் சம்பவம் தொழில்நுட்பம் எவ்வாறு மனித உணர்வுகளையும், உறவுகளையும் மாற்றி அமைக்கிறது என்பதற்கு ஒரு முக்கிய உதாரணமாகப் பார்க்கப்படுகிறது.
