மத்தியப் பிரதேசம் மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்திலுள்ள படாமல்ஹாரா மருத்துவமனையின் பிரசவ வார்டில் செவிலியர் ஒருவர் இந்திப் பாடல்களுக்கு ‘ரீல்ஸ்’ செய்துள்ளது குறித்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, இணையப் பயனர்கள் பலத்த கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் சத்தர்பூர் மாவட்டத்திலுள்ள படாமல்ஹாரா மருத்துவமனையில் நடந்ததாகக் கூறப்படுகிறது.

 

காணொலியில், ஒரு செவிலியர் கைப்பேசியை வைத்துக்கொண்டு ‘ரீல்ஸ்’ செய்ய, மேலும் இரு ஊழியர்கள் ஒரு மேசையருகே நின்று அதில் பங்கெடுத்துள்ளனர். இந்தக் காணொலி வெளியாகிப் பரவலான பிறகு, மருத்துவமனை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, தலைமை மருத்துவ அதிகாரி (BMO) மோகித் ராஜ்புத், காணொலியில் இடம்பெற்றிருந்த ஊழியர்களுக்கு உடனடியாகக் குற்ற அறிவிப்பை அனுப்பியுள்ளார். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.