உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் நடந்த விபத்துக் காட்சி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி, அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரோஹ்தா காவல் நிலையத்துக்குட்பட்ட கினௌனி கிராமத்தைச் சேர்ந்த கமலேஷ் (55) என்ற பெண், தனது கரும்புத் தோட்டத்திலிருந்து கரும்பு உரித்துவிட்டு, மாட்டு வண்டியுடன் நடந்து வீட்டிற்குத் திரும்பி வந்துள்ளார். சி.சி.டி.வி. காட்சிகளின்படி, கமலேஷ் கிராமத்திற்குள் நுழைந்தபோது, திடீரென மாடு மிரண்டு வேகமாக ஓடத் தொடங்கியுள்ளது.

மாட்டைத் தன் கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவர அவர் முயன்றபோது, மாட்டு வண்டிக்கும், அருகிலுள்ள சுவருக்கும் இடையில் அவர் சிக்கிக்கொண்டார். இந்தக் கடுமையான தாக்கத்தால் கமலேஷ் படுகாயங்களுடன் கீழே விழுந்தார். உடனடியாக கிராம மக்கள் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர், ஆனால் அவர் சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவர் மகாவீரை இழந்த நிலையில், இரண்டு மகன்களுடன் விவசாயப் பணிகளை மேற்கொண்டு, குடும்பத்தின் முக்கிய வாழ்வாதாரமாக இருந்த கமலேஷின் திடீர் மரணம் ஒட்டுமொத்தக் கிராமத்தையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.