கோலி கௌஹ்கான் என்ற 25 வயது இளம்பெண், 12 வயதில் உறவினருக்குத் திருமணமாகி, 13 வயதில் குழந்தை பெற்றெடுத்தார். பாலோச் சமூகத்தைச் சேர்ந்த இவர், ஈரானின் மிகவும் ஒதுக்கப்பட்ட சிறுபான்மையினரில் ஒருவர். திருமணமான கணவர் பல ஆண்டுகளாக உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறுத்தினார்.
தாங்க முடியாமல் பெற்றோர் வீட்டுக்குத் தப்பிச் சென்றார், ஆனால் தந்தை “வெள்ளை உடையில் கொடுத்தேன், சவக்குருட்டில் மட்டுமே திரும்ப வரலாம்” என மறுத்துவிட்டார். மீண்டும் கணவரிடம் திரும்பிய கோலி, ஒருநாள் 5 வயது மகனை அடிப்பதைக் கண்டு உறவினரை உதவிக்கு அழைத்தார். சண்டையில் கணவர் இறந்துவிட, கோலியும் உறவினரும் கைதாகினர். 2018-ல் நடந்த இச்சம்பவத்துக்காக கிசாஸ் (பழிக்குப் பழி) தண்டனையாக மரண தீர்ப்பு விதிக்கப்பட்டது. கோர்கான் சிறையில் 7 ஆண்டுகளாக அடைபட்டுள்ளார்.
ஈரான் சட்டப்படி, பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ‘டியா’ (இரத்தப் பணம்) கொடுத்தால் மரண தண்டனையைத் தவிர்க்கலாம். சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில், 10 பில்லியன் தோமான் (சுமார் ரூ.93 லட்சம்) கொடுத்தால் மன்னிப்பு தர கணவரது குடும்பம் ஒப்புக்கொண்டது.
ஆனால் கோர்கான் நகரை விட்டு வெளியேற வேண்டும், மகனைச் சந்திக்கக் கூடாது என நிபந்தனை. டிசம்பர் மாதத்துக்குள் பணம் திரட்ட வேண்டும். ஈரான் மனித உரிமை அமைப்பு கூறுகையில், குழந்தைத் திருமணம் சட்டப்பூர்வமாக இருப்பதாலும், பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு சட்டப் பாதுகாப்பு இல்லாததாலும் இது போன்ற பாகுபாடு நிலவுகிறது. பெண், பாலோச், ஏழை என மும்முனைப் பாகுபாட்டால் கோலியின் நிலை மோசமடைந்துள்ளது.
