பெங்களூருவில் போக்குவரத்து காவலர் ஒருவர் சாலையோரத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநருடன் வாக்குவாதத்தின் போது அவரை  தாக்கிய காட்சி இணையத்தில் வைரலாகி, பொதுமக்களின் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வரும் அந்த  வீடியோவில், போக்குவரத்து காவலரும் பைக்கருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடக்கின்றது. திடீரென காவலர் அந்த ஓட்டுநரின் கன்னத்தில் அறைந்துவிடுகிறார். பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இந்த நடவடிக்கை, “அதிகார துஷ்பிரயோகம்” மற்றும் “அவசியமில்லாத வன்முறை” என பலராலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த சம்பவம் நடந்த சரியான இடம் மற்றும் நேரம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும், இந்த காட்சிகள் காவல்துறையின் நடத்தை மற்றும் பொறுப்புக்கூறல் குறித்து சமூக ஊடகங்களில் தீவிர விவாதத்தை எழுப்பியுள்ளன. “போக்குவரத்து காவலர்களுக்கு வாகன ஓட்டிகளை நிறுத்தவும், கேள்வி கேட்கவும், விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கவும் அதிகாரம் இருக்கலாம். ஆனால் தாக்குதல் நடத்த உரிமையில்லை என கூறியுள்ளனர். சமூக ஊடகங்களில் பலர் பெங்களூரு நகர காவல்துறை மற்றும் போக்குவரத்துத் துறையை டேக் செய்து விரைவான ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.

இந்த சம்பவம் பரவியதைத் தொடர்ந்து, பெங்களூரு நகர காவல்துறை உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது. காவல்துறை வட்டார தகவலின்படி, வீடியோவில் காணப்படும் போக்குவரத்து காவலர் இடைநிறுத்தப்பட்டுள்ளார். இதுபற்றி காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்ததாவது, “சம்பவம் குறித்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. விசாரணை முடிவுகள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்,” என கூறினர்.