ஹைதராபாத் நகரில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால், பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால், இரு சக்கர வாகனங்களில் பயணித்தவர்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர்.

சில தெருக்களில் வெள்ள நீரின் வேகம் அதிகமாக இருந்ததால், பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் அடித்துச் செல்லப்பட்டன. இந்நிலையில், ஸ்விக்கி மற்றும் ஸொமேட்டோ உணவு விநியோக ஊழியர்கள், வெள்ளத்தில் சிக்கிய ஒருவரையும் அவரது பைக்கையும் காப்பாற்றிய சம்பவம், இணையத்தில் வைரலாகி, அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.

வெள்ளத்தில் சிக்கிய ஒருவர், தனது அனுபவத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, “ஸ்விக்கி, ஸொமேட்டோ ஊழியர்கள் உணவு விநியோகம் மட்டுமல்ல, வெள்ளத்தில் இருந்து என்னையும் என் பைக்கையும் காப்பாற்றினர்,” என குறிப்பிட்டார்.

முழங்கால் அளவு வெள்ளத்தில் அவரது பைக் சிக்கியபோது, இந்த ஊழியர்கள் அதை பாதுகாப்பாக இழுத்து வந்தனர். இதைக் கண்ட மற்றவர்கள், வெள்ள நீரின் வேகத்தை உணர்ந்து, பாதுகாப்பாக பயணிக்க முடிவு செய்தனர்.

“நள்ளிரவில் வீடு திரும்ப முயன்ற நூற்றுக்கணக்கானவர்களுக்கு இவர்கள் உதவினர்,” என அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மழை தொடர்ந்து பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், இதுபோன்ற மனிதநேய செயல்கள் அனைவரையும் நெகிழ வைத்துள்ளன.