ஐபிஎல் கிரிக்கெட்டில் சூப்பர் ஸ்டார் வீரர்களில் ஒருவராக திகழ்ந்தவர் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயில். கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி), பஞ்சாப் கிங்ஸ் என மூன்று அணிகளுக்காக விளையாடிய கெயில், குறிப்பாக ஆர்சிபியுடன் நீண்ட கால வெற்றிகரமான பயணம் மேற்கொண்டார்.

ஆனால், பஞ்சாப் கிங்ஸ் அணியுடனான அவரது அனுபவம் மிகவும் கசப்பானதாக இருந்தது. முதல் முறையாக இதைப் பற்றி வெளிப்படையாக பேசிய கெயில், ப்ரீத்தி ஜிந்தாவின் பஞ்சாப் அணியில் தனக்கு ஏற்பட்ட அவமானத்தால் கண்ணீர் வடித்ததாகவும், அப்போதைய பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவுடன் இது குறித்து உரையாடியதாகவும் உருக்கமாக கூறியுள்ளார்.

கடந்த 2018 முதல் 2021 வரை பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய கெயில், அந்த அணியில் தனக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என வேதனை தெரிவித்தார். ஷுபங்கர் மிஸ்ராவின் யூடியூப் நிகழ்ச்சியில் பேசிய அவர், “பஞ்சாப் கிங்ஸ் அணியில் எனது ஐபிஎல் பயணம் முன்கூட்டியே முடிந்துவிட்டது. ஒரு மூத்த வீரராக, ஐபிஎல்லுக்கு நான் அளித்த பங்களிப்பு மற்றும் அணிக்கு கொடுத்த மதிப்புக்கு உரிய மரியாதை எனக்கு வழங்கப்படவில்லை.

என்னை ஒரு குழந்தை போல நடத்தினார்கள். முதல் முறையாக என் வாழ்க்கையில் மன அழுத்தத்தில் (டிப்ரெஷன்) இருப்பதாக உணர்ந்தேன்,” என்றார். அனில் கும்ப்ளேவுடன் பேசியபோது கண்ணீர் விட்டதாகவும், அணியின் நிர்வாக முறையில் ஏமாற்றம் அடைந்ததாகவும் கூறினார். அப்போதைய கேப்டன் கேஎல் ராகுல், “கிறிஸ், தங்கு, அடுத்த போட்டியில் ஆடலாம்,” என அழைத்தபோதும், “எல்லோருக்கும் வாழ்த்துக்கள்,” என்று கூறிவிட்டு தனது பையை எடுத்துக்கொண்டு வெளியேறியதாக கெயில் நினைவு கூர்ந்தார்