ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மோனா வேல் கோல்ஃப் மைதானத்தில் சிறிய விமானம் ஒன்று நேற்று பிற்பகல் அவசரமாக தரையிறங்கியதில் பரபரப்பு ஏற்பட்டது. பைப்பர் செரோகி ஒற்றை எஞ்சின் கொண்ட அந்த விமானத்தில் பயிற்றுவிப்பாளர் மற்றும்  மாணவர் ஒருவர் இருந்தனர்.

திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறால், விமானி ஃபேர்வே புல்வெளியில் அவசரமாக தரையிறக்க முயன்றார். விமானம் தரையில் சறுக்கியபோதும், அதிர்ஷ்டவசமாக இருவருக்கும் சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்டன. அவர்களை மீட்ட உள்ளூர் மக்கள், ஆம்புலன்ஸ் குழுவினரின் உதவியுடன் ராயல் நார்த் ஷோர் மருத்துவமனைக்கு அனுப்பினர்.

நிகழ்வை நேரில் கண்ட கோல்ஃப் வீரர்கள், “விமானம் எங்கள் தலையின் மீது மிகவும் தாழ்வாக பறந்தது. எந்த ப்ரொப்பல்லர் சத்தமும் கேட்கவில்லை. இயந்திரம் முழுமையாக நிறுத்தப்பட்டிருந்தது போல தோன்றியது” என்று தெரிவித்தனர். அந்தக் காட்சிகள் அங்கு இருந்த அனைவரையும் பதற வைத்ததாகவும், விமானம் தரையில் சறுக்கி நிற்கும் வரை பதட்டமாகவே இருந்ததாக  கூறினர்.

“>

 

விபத்துக்கான காரணம் தொடர்பாக ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு பணியகம் (ATSB) விசாரணை தொடங்கியுள்ளது. இடிபாடுகள் ஆய்வு செய்யப்பட்ட பின், முதற்கட்ட அறிக்கை அடுத்த சில வாரங்களில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளனர். பயிற்சி விமானங்களில் பாதுகாப்பு குறித்த கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இந்த விபத்தில் இருவரும் உயிருடன் தப்பியது “ஒரு அதிசயமான விளைவு” என அதிகாரிகள் வியப்புடன் கூறியுள்ளனர்.