புவனகிரி பேரூராட்சி அலுவலகத்தில் விசிக கவுன்சிலர் தாக்குதல் சம்பவத்திற்கு  தமிழ்நாடு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து, அரசு ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

கடலூர் மாவட்டம் புவனகிரியில், அலுவலகத்தில் பணியில் இருந்த அரசு ஊழியர் மீது விசிக (வி.சி.கே) கவுன்சிலர் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டணியில் இடம்பெறும் விசிக கட்சியின் கவுன்சிலர், அந்த ஊழியரை தகாத வார்த்தைகளால் திட்டி, உடல் ரீதியாக தாக்கியதோடு, தொடர்ந்து மிரட்டலும் விடுத்துள்ளார்.

அரசு அலுவலகத்துக்குள் பாதுகாப்பாக பணிபுரியும் ஊழியர்கள் மீதான இந்த தாக்குதல், நிர்வாக செயல்பாட்டின் மட்டுமல்லாமல், மக்களின் நம்பிக்கையையும் சிதைக்கும் செயல் எனக் குறிப்பிடப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் இது போன்ற சட்ட விரோத செயல்கள் தனிப்பட்ட சம்பவங்களாக மட்டுமே இல்லாமல், திமுக ஆட்சியில் அரசியல் பண்பாட்டின் ஒரு பகுதியாக மாறியுள்ளதாகவும், பொது நிறுவனங்களை மதிக்காத சூழல் உருவாகியுள்ளதாகவும்  குற்றம் சாட்டியுள்ளார்.

“>

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, அரசியல் வட்டாரங்களில் கடும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. பொதுமக்கள் பாதுகாப்பிற்காக உள்ள அமைப்புகள் தாமே தாக்குதலுக்குள்ளாகும் நிலை, ஆட்சியின் பொறுப்புணர்வு மற்றும் சட்டம்-ஒழுங்கு நிலையை கேள்விக்குள்ளாக்கும் வகையில் உள்ளதாக  பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து, அரசு ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பு :

இந்த சம்பவம் தொடர்பாக ராதாகிருஷ்ணன் போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய புவனகிரி போலீசார், விசாரணை நடத்தி, விசிக கவுன்சிலர் பாரதிதாசனை கொலை மிரட்டல் மற்றும் அரசு ஊழியரை பணியில் தடுக்கும் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது  செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.