மேற்கு வங்காள மாநிலம் மேற்கு மேதினிபுர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் 9வது வார்டைச் சேர்ந்த மனசா சௌதரி என்ற பெண் உயிரிழந்தார். அவரின் கணவர் கன்னையாலால் சௌதரி, திரிணமூல் காங்கிரஸ் (TMC) கட்சியைச் சேர்ந்த முன்னாள் நகராட்சி கவுன்சிலர் ஆவார்.

மழை வெள்ளம் காரணமாக சுடுகாடு செல்லும் வழிகள் அனைத்தும் முடக்கப்பட்டதால், அவரது உடலை வாழைத்தண்டு மற்றும் மரக்கட்டைகளால் தயாரிக்கப்பட்ட தற்காலிக படகில் வைத்து எடுத்துச் செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டது.

இந்த வீடியோ வெளியாகியதும், சமூக வலைதளங்களில் பரபரப்பாக பகிரப்பட்டு, மக்கள் மனதில் பெரும் வருத்தத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலை மீது பாஜகவின் எம்எல்ஏ சீதல் கபத் கடுமையாக விமர்சனம் செய்து, மாநில அரசின் நிர்வாகத் திறனை கேள்விக்குள்ளாக்கியுள்ளார்.

“கட்டால் நகராட்சியில் வளர்ச்சி எதுவும் செய்யப்படவில்லையா? மின்சுடுகாட்டுப் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. கோடிக்கணக்கில் திட்ட நிதிகள் முறைகேடாக பயன்படுத்தப்படுகின்றன,” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இதையடுத்து ‘கட்டால் மாஸ்டர் பிளான்’ திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாக சமூக வலைதளங்களில் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். “இது போன்ற காட்சிகள் கிராமப்புற மேற்கு வங்கம் இன்னும் சுதந்திரத்துக்குப் பின் காலத்தில் வாழ்கிறது என்பதைக் காட்டுகிறது” எனக் கூறியுள்ளனர்.