பீகார் மாநிலத்தின் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையால் பெரும் வெள்ளக்காட்டாக மாறியது. கமல்நாத் நகர பகுதியில், மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் ஒருவர், மழைநீரால் நிரம்பி இருந்த திறந்த சாக்கடையை கவனிக்க முடியாமல் நேராக அதில் விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சாலையின் மீது மழைநீர் தேங்கி, சாக்கடை மூடியை அறிந்துகொள்ள முடியாமல் போனது. அந்த நபர் தனது பைக்குடன் நேராக சாக்கடையில் விழுந்த காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

அந்த இடத்தில் இருந்த பொதுமக்கள் மிக வேகமாக செயல்பட்டு, அந்த இளைஞரை உயிருடன் மீட்டனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.  கனமழை காரணமாக நகர பகுதிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டிருந்தாலும், கிராமப்புற விவசாயிகள் இந்த மழையை வரவேற்கின்றனர்.

நீண்ட நாட்களாக வறட்சியில் இருந்த  நிலங்களுக்கு இந்த மழை பசுமையை மீட்டுத் தரும் என்று நம்பப்படுகிறது. நல்ல மகசூல் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது. ஆனால், நகரங்களில் உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் மேம்படுத்தப்பட வேண்டிய அவசியத்தை இந்த சம்பவம் சுட்டிக்காட்டுகிறது.