கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் அமைந்துள்ள கவி சித்தேஸ்வரா மடம், வருடந்தோறும் நடைபெறும் திருவிழாவால் “தெற்கின் கும்பமேளா” என அழைக்கப்படுகிறது. இந்த மடத்தில் பெரும்பாலும் ஹிந்துக்கள் மட்டுமே வந்து வழிபடுவது வழக்கம். ஆனால், கடந்த 8 நாட்களாக முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த ஹசீனா பேகம் என்ற பெண், பர்தா அணிந்து இம்மடத்தில் தியானத்தில் ஈடுபடுவதால் பக்தர்கள் பெரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.

கொப்பல் மாவட்டம் எலபுர்கா தாலுகாவின் குடாரி மோதியில் வசித்து வரும் ஹசீனா பேகம், மடத்தின் நாகதேவர் சிலை முன் அமர்ந்து தினமும் ஒரு மணி நேரம் தியானம் செய்து வருகிறார். “மன அமைதிக்காக இங்கு வந்துள்ளேன். என் வாழ்க்கையில் பல சிரமங்கள் ஏற்பட்டது. அனைத்து மதங்களும் ஒன்று என்பதால்தான் இந்த மடத்திற்கு வந்தேன். கடந்த 13 ஆண்டுகளாக இந்த மடத்தில் நான் வருகிறேன். எனது குழந்தைகளுக்கும் மடாதிபதியின் ஆசீர்வாதம் கிடைத்துள்ளது” என உணர்ச்சி மிகுந்து தெரிவித்தார்.

மேலும், “ஒருவர் எனது மனதை புண்படுத்தினார். அதனால் தியானம் செய்யத் தொடங்கினேன். நான் நாகப்பாவையும் பசவண்ணரையும் நினைத்து தியானம் செய்கிறேன். எனக்கு இங்கு எந்த பாகுபாடும் காட்டப்படவில்லை. இந்த தியானம் எனக்கு மன நிம்மதியை தருகிறது” என்றார் ஹசீனா பேகம். இந்த சம்பவம் சமூக நல்லிணக்கத்துக்கான ஒரு முக்கிய எடுத்துக்காட்டு என பக்தர்கள் பாராட்டுகிறார்கள்.

“>