மராட்டிய மாநிலத்தின் பால்கர் மாவட்டத்தில், மராத்தி மொழியில் பேச மறுத்ததற்காக, புலம்பெயர்ந்த ஒரு ஆட்டோ ஓட்டுநர் மீது சிவசேனா (UBT) மற்றும் மகாராஷ்டிரா நவநிர்மாண சேனா (MNS) தொண்டர்கள் இணைந்து தாக்கிய பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.

விரார் ரயில் நிலையம் அருகே நடந்த இந்த சம்பவம், சமூக ஊடகங்களில் வெளியான ஒரு பழைய வீடியோவால் தூண்டப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த வீடியோவில், ஓட்டுநர் ஒருவர், மராத்தி பேச மறுத்து இந்தி மற்றும் போஜ்புரி மொழியில் பேசி உள்ளூர் இளைஞரை அவமதிக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, சிவசேனா மற்றும் MNS தொண்டர்கள் அந்த ஓட்டுநரை தேடிச் சென்று, பொதுமக்கள் முன்னிலையில் தாக்கினர். மேலும், “மராத்தியர்களை அவமதித்தது போல நடந்துகொண்டதாக” கூறி, அவர் பொதுவாக மன்னிப்பு கேட்க வற்புறுத்தப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து விரார் நகர சிவசேனா (UBT) தலைவர் உதய் ஜாதவ், “மராத்தி மொழி மற்றும் மகாராஷ்டிராவை அவமதிப்பவர்களுக்கு இது போலத்தான் பதில் கொடுக்கப்படும். அவர் புண்படுத்தியவர்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார். நாங்கள் வற்புறுத்தி அதைப் பெற்றோம்” எனக் கூறியுள்ளார்.

சனிக்கிழமை நடந்த தாக்குதலின் போது, பெண்கள் உட்பட சிலர் கலந்துகொண்டதாகவும், இது தொடர்பாக எந்த அதிகாரப்பூர்வ புகாரும் காவல்துறைக்கு வரவில்லை என்றும், வீடியோவை வைத்து விசாரணை நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று, ஜூலை 1ஆம் தேதி தானே மாவட்டத்தில், ஒரு உணவுக் கடை உரிமையாளர் மராத்தி பேசாததற்காக MNS தொண்டர்களால் தாக்கப்பட்ட சம்பவமும் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவங்களை தொடர்ந்து, மொழியை மையமாகக் கொண்ட மோதல்கள் மீண்டும் தலைதூக்கியுள்ளன.