
தமிழகத்தைச் சேர்ந்த மூத்த தமிழறிஞர் வா.மு. சேதுராமன் சென்னையில் நேற்று வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது உடலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். முன்னதாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில்,பன்னாட்டுத் தமிழுறவு மன்ற நிறுவனர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்கள் மறைந்த செய்தியறிந்து சொல்லொணாப் பெருந்துயர் என்னை ஆட்கொண்டது!
இன்றுகூட முரசொலியில், “ஓரணியில் தமிழ்நாட்டின் உரிமை நாட்டுவோம். தமிழர் ஒற்றுமையாய்த் திரண்டெழுந்தே வலிமை காட்டுவோம்!” எனக் கவிதை தீட்டியிருந்த அவர் இப்போது நம்மிடையே இல்லை என்பதைச் சிந்தை ஏற்க மறுக்கிறது.
“தமிழ் தமிழ் தமிழ் என்று தன்னுடைய வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே தன்னை ஒப்படைத்திருக்கின்ற ஒரு பெருமகனைக் காண வேண்டுமென்றால், அது பெருங்கவிக்கோ சேதுராமனைத் தவிர வேறு யாரும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.” என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் பாராட்டப்பட்ட பெருந்தகை அவர்!
தமிழ்நாடு அரசின் கலைமாமணி, திருவள்ளுவர் விருது உள்ளிட்ட பல விருதுகளுக்குச் சிறப்பு சேர்த்த செந்தமிழ்ச் செம்மல்.
தமிழ்ப்பணிக்கெனத் தன்னை ஒப்படைத்துக்கொண்ட அந்தத் தியாகச் சுடர் தனது ஒளியை நிறுத்திக் கொண்டு, வேதனை எனும் இருளில் நம் மனதைத் தவிக்கவிட்டிருக்கிறார்!
ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், நூறுக்கும் மேற்பட்ட கவிதை நூல்கள் உள்ளிட்ட படைப்புகளைத் தமிழுலகிற்கு அளித்த பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்களது புகழ் தமிழுள்ள வரை போற்றப்படும்!
அன்னாரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர் – உறவினர்கள் – தமிழ்கூறு நல்லுலகின் சான்றோர்கள் – தமிழ்த் தொண்டர்கள் என அனவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் தற்போது வா.மு சேதுராமன் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் அஞ்சலி செலுத்தப்படும் என்ற முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் அவரது பணிகளை போற்றும் விதமாக காவல்துறை மரியாதையுடன் அவரது உடலுக்கு இறுதி சடங்கு செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.