நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கி உள்ளது. வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் காரணமாக ஷேக் ஹசீனா பிரதமர் பதவியில் இருந்து விலகினார். அதன் பின் அவர் இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

அந்நாட்டில் அவர் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. அதில் ஆஜராக வேண்டுமென நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்தது. அவரை நாடு கடத்தும் படி கூறிய முகமது யூனஸ் தலைமையிலான இடைக்கால அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது. இந்நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு ஆறு மாத சிறை தண்டனை வழங்கி சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த தீர்ப்பினை முகமது கோலம் மோர்டுசா மொசும்தர் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கியுள்ளது. பிரதமர் பதவியிலிருந்து ஷேக் ஹசீனா விலகி 11 மாதங்கள் ஆன நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட முதல் தண்டனை இதுவாகும்.