
பஞ்சாப் மாநிலம் லூதியானா அருகே உள்ள ஷெர்பூர் சவுக் பகுதியில், ஒரு காலியான இடத்தில் இருந்து நீல நிற டிரம்மில் ஒருவர் சடலம் வீசப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சடலத்திலிருந்து வீசிய துர்நாற்றம் காரணமாக அப்பகுதி மக்கள் அதனை முதலில் கவனித்தனர். உடனடியாக அவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, டிரம்மை திறந்து பார்த்தபோது, அதற்குள் ஒரு சாக்குப் பையில் கட்டப்பட்ட நிலையில் ஒரு நபரின் சடலம் இருந்தது. சடலத்தின் கைகள் மற்றும் கால்கள் கயிறால் கட்டப்பட்டிருந்தது. இது ஒரு திட்டமிட்ட கொலை என்று சந்தேகம் எழுந்துள்ளது. சடலம் தற்போது சிவில் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
இறந்தவரின் அடையாளம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. சம்பவம் தொடர்பாக போலீசார், அருகிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். சடலத்தின் புகைப்படங்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு, அது யாருடையது மற்றும் குற்றத்திற்குப் பின்னால் யார் இருக்கின்றனர் என்பதை கண்டறிய தாணா பிரிவு 6 போலீசார் விசாரணையில் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும் முன்னதாக உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த முஸ்கான் என்பவர் தன்னுடைய கணவனை கள்ள காதலனுடன் சேர்ந்து கொலை செய்து உடலை துண்டுகளாக வெட்டி நீல நிற ட்ரம்பில் வைத்து சிமெண்ட் போட்டு பூசிய சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.