கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வட மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியின் 6 வயது மகளை சிறுத்தை ஒன்று தாக்கி இழுத்துச் சென்று கொன்றது. கிட்டத்தட்ட 18 மணி நேர தேடலுக்கு பிறகு சிறுமியின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் சிறுமியை தாக்கிக் கொன்ற அந்த சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்துள்ளனர்.

இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் சிறுத்தை நடமாட்டத்தை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் சிறுமியை சிறுத்தை தாக்கிக் கொன்றது தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, மனிதர்களை யானைகள் உள்ளிட்ட விலங்குகள் தாக்குவது வழக்கம்தான்.

அதற்காகத்தான் அரசு தரப்பில் இழப்பீடு வழங்குகிறோம் என்று கூறினார். மேலும் மிருகங்களிடமிருந்து மனிதர்களை காக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கிறது என்று கூறுவதற்கு பதிலாக மிருகங்கள் மனிதர்களை தாக்குவது வழக்கம் தான் அதற்காகத்தானே நாங்கள் இழப்பீடு வழங்குகிறோம் என அமைச்சர் கூறியது சர்ச்சையாக மாறிய நிலையில் அவர் பேசிய வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.