
விழுப்புரம் மாவட்டம் பனிச்சமேடு மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய்(25). இவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீமதி(23) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை.
இந்த நிலையில் விஜய்யின் அக்காள் மகளான கீர்த்திகா(15) தனது தாய்மாமன் விஜய் வீட்டில் தங்கி இருந்து அனுமந்தை ஊராட்சி ஒன்றிய மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் விஜய் தனது மனைவி மற்றும் அக்கா மகளுடன் சேர்ந்து உணவு சாப்பிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து கீர்த்திகா வீட்டு மேல் மாடியில் இருக்கும் அறைக்கு தூங்க சென்றார். நேற்று அதிகாலை விஜய் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற பிறகு நீண்ட நேரமாகியும் கீர்த்திகா வெளியே வராததால் ஸ்ரீமதி மாடிக்கு சென்று பார்த்தார்.
அப்போது கீர்த்திகா தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு ஸ்ரீமதி அதிர்ச்சியடைந்தார். பின்னர் ஸ்ரீமதியும் கீழ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதாவது முந்தைய நாள் இரவுச சாப்பிட்டபோது ஸ்ரீமதி கீர்த்திகாவிடம் பத்தாம் வகுப்பு படிப்பதால் அதிகமாக செல்போன் உபயோகிக்க வேண்டாம் என அறிவுரை கூறியதாக தெரிகிறது.
இதனால் மன உளைச்சலில் இருந்த கீர்த்திகா வீட்டு மாடிக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த ஸ்ரீமதி தன்னால்தான் கீர்த்திகா தற்கொலை செய்து கொண்டதாக நினைத்து குற்ற உணர்ச்சியில் அவரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.