தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே உள்ள உப்புத்துறை மாளிகைபாறை பகுதியை சேர்ந்தவர்  ராஜா (வயது 37). இவர்  கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ஜெயா (வயது 31) இருவருக்கும் ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

வீட்டுச் செலவுக்காக அடிக்கடி பணம் கேட்டு கணவனை வற்புறுத்தி வந்த ஜெயா, உறவினர்கள் மற்றும் தாயுடன் பேச கூடாது என கூறியுள்ளார்.  அதனையும் மீறி ராஜா தனது தாய் அன்னத்தாய், அக்கா தங்கம் ஆகியோரிடம்  பேசியுள்ளார்.

இதனால் ஆத்திரத்தில் 2023 ஏப்ரல் 30-ஆம் தேதி, ராஜா வீட்டிற்கு வந்து போது, ஜெயா சமையலறையில் பதுக்கி வைத்திருந்த அரிவாளை எடுத்து தனது கணவரை சரமாரியாக வெட்டினார். ராஜா வலியால் அலறியதை கேட்டு அவரது தாய் அன்னத்தாய் கேட்டு ஓடி வந்த போது, வீடு உள்ளே இருந்து பூட்டப்பட்டதால் அவர் திரும்பிச் சென்றார்.

அதன் பின்னர் ராஜாவை பலத்த காயங்களுடன் வெட்டி கொலை செய்த ஜெயா, தடயங்களை மறைக்க உடலை குளிப்பாட்டி, ரத்தக்கறை படிந்த ஆடைகளை மாற்றி, அரிவாளை வீட்டருகே மறைத்து வைத்துப், கணவருக்கு வலிப்பு ஏற்பட்டது என ஆட்டோவில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நாடகம் ஆடியுள்ளார்.

ஆட்டோ டிரைவரிடம் ராஜா இறந்துவிட்டதாக கூறிய ஜெயா, உடலை மீண்டும் வீட்டிற்கு திரும்பக் கொண்டு வந்தார். இது சந்தேகம் எழுப்ப, ராஜாவின் தாய் அன்னத்தாய் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில் உடலில் வெட்டுக் காயங்கள், வீட்டில் ரத்தக்கறைகள், ரத்த வாசனை இருந்ததை கண்டுபிடித்தனர். விசாரணையில் ஜெயா கொலை செய்து நாடகமாடியது தெரியவந்தது.

இந்த வழக்கு தேனி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அரசு தரப்பில் வக்கீல் பாஸ்கரன் வாதாட, நீதிபதி ஸ்வர்ணம் ஜே. நடராஜன், ஜெயாவுக்கு ஆயுள் தண்டனை, ₹10,000 அபராதம், மேலும் அபராதம் செலுத்தாவிட்டால் 6 மாத கூடுதல் சிறை தண்டனை வழங்கி நேற்று தீர்ப்பு வழங்கினார்.