மத்திய கிழக்கு நாடுகளின் நிலைமை பெரும் பதற்றத்தில் உள்ள நிலையில், ஈரான் தனது நாட்டுக்குள் ஊடுருவியுள்ள இஸ்ரேலின் உளவுத்துறை அமைப்பு மொசாட் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சமீபத்தில் இருதரப்பு போருக்கு இடையில் சற்று அமைதி நிலவியிருந்த நிலையில், ஈரான் தனது ஹம்தான் மாகாணத்தில் இருந்து மொசாட்டுக்காக(இஸ்ரேலின் உளவுத்துறை )  உளவு பார்த்த 6 பேரை கைது செய்துள்ளது. இந்த 6 பேரும் சைபர் வழியாக ரகசிய தகவல்களை இஸ்ரேலுக்கு அனுப்பி வந்ததாகவும், நாட்டிற்குள் அரசுக்கு எதிரான மனப்போக்கை தூண்டி வந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஈரான் அரசு தரப்பில் வெளியிடப்பட்ட தகவலின்படி, இந்த 6 பேரும் இஸ்ரேலின் மொசாட் அமைப்பின் கட்டளைகளின்படி பணியாற்றி வந்ததாகவும், அவர்கள் மீது தற்போதைய சட்டங்களின் கீழ் “தேசத்துரோகம்” என்ற குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஈரானில் தேசத்துரோகக் குற்றச்சாட்டுக்கு மரணதண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கடந்த ஒரு வாரத்தில் மொசாட்டுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் ஈரான் 20 பேரை கைது செய்துள்ளதுடன், அவர்களில் இருவர் ஏற்கனவே தூக்கில் போடப்பட்டுள்ளனர்.

ஈரான் இன்டர்நேஷனல் ஊடகம் வெளியிட்ட தகவலின் அடிப்படையில், மொசாட் அமைப்பு ஈரானின் போக்குவரத்து துறையை முக்கிய உளவு ஊடுருவலுக்கான பகுதியாகக் கொண்டு செயல்படுகிறது. குறிப்பாக, லாரி ஓட்டுநர்களாக வேலை பார்க்கும் பலர், உளவுத் தகவல்களை இஸ்ரேலுக்கு அனுப்பும் வகையில் பணியாற்றுவதாக கூறப்படுகிறது. இது போன்ற ஊடுருவல் நடவடிக்கைகள், ஈரானின் பாதுகாப்பு அமைப்புகளை பெரிதும் குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறது.

போருக்கு முன்பாக, மொசாட் நடத்திய இரகசிய நடவடிக்கையில் ஈரானின் 15 முக்கிய அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, இஸ்ரேலிய நடவடிக்கையிலேயே 10 ஈரானிய இராணுவ அதிகாரிகள் பலியாகினர்.

இவர்களில் ஒருவர் போரின் முக்கியத் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதல் முழுக்க மொசாட் அமைப்பின் வழிநடத்தலிலேயே நடைபெற்றதாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.