
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், 30 வயதான பிரெஞ்சு சுற்றுலாப் பயணியை ஒரு இளைஞர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்தப் பெண் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொடூர சம்பவம் உதய்பூரின் பட்கான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டைகர் ஹில் பகுதியில் திங்கள்கிழமை மாலை நடைபெற்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் படி, அவர் ஒரு ஓட்டலில் நடந்த விருந்தில் கலந்து கொண்டிருந்தபோது, அந்த இளைஞர் அவரிடம் நட்பாக பழகியுள்ளார். பின்னர், அந்த இளைஞர் நெருக்கம் காட்டி தன்னுடன் வெளியே வருமாறு கூறியதும், பலவந்தமாக வீட்டுக்குள் அழைத்துச் சென்றார்.
அங்கு அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த தாக்குதலுக்குப் பிறகு, அவருடைய உடல்நிலை மோசமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
தகவல் கிடைத்ததும், உதய்பூர் டிஎஸ்பி கைலாஷ் சந்திரா மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் பூரண் சிங் ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். காவல்துறையினர், சம்பவம் நடந்த ஓட்டல் மற்றும் அதன் உரிமையாளரை விசாரிக்கத் தொடங்கியுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் தற்போது தப்பி ஓடிவிட்ட நிலையில், அவரை பிடிக்க விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம், உதய்பூரில் சுற்றுலாவிற்கு வரும் வெளிநாட்டுப் பயணிகள் மீதான பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழவைத்துள்ளது. குற்றவாளி விரைவில் கைது செய்யப்பட்டு, உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உதய்பூர் எஸ்.பி யோகேஷ் கோயல் உறுதி தெரிவித்துள்ளார்.