
மேற்காசிய பிராந்தியத்தில், ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் துப்பாக்கிச் சண்டை மற்றும் தாக்குதல்கள், உலக நாடுகளை பெரும் அதிர்வில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் போராட்ட சூழல், தற்போது அமெரிக்காவின் நேரடி தலையீட்டால் மேலும் தீவிரமடைந்துள்ளது.
ஈரானில் உள்ள போர்டோ, இஸ்பஹான் மற்றும் நடான்ஸ் ஆகிய முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா விமானப்படை மூலம் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியது, இது சர்வதேச மட்டத்தில் பெரும் பதட்டத்தையும் அபாயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழ்நிலையில், ஈரான் தலைவரும் உயர் மத தலைவருமான அயதுல்லா அலி கமேனி, சமூக வலைதளத்தில் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அதில், “எதிரி மிகப்பெரிய தவறு செய்துவிட்டார். அவர் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டியவர். தண்டனை தொடரும். அதற்கான நேரம் வந்துவிட்டது. இப்போது அவர் தண்டிக்கப்படுவார்,” என்று அவர் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார். அவரது இந்தக் கருத்துகள், ஈரானின் எதிர்கால பதிலடி நடவடிக்கைகள் கடுமையாக இருக்கும் என்பதை வெளிப்படுத்துகின்றன.
இதேநேரத்தில், இஸ்ரேல், “ஈரான் தனது அணு ஆயுத திட்டத்தை முற்றிலும் கைவிடும் வரை எங்களின் தாக்குதல்கள் தொடரும்” என அறிவித்துள்ளது. இதனால், இரு நாடுகளும் போருக்கு தயாராக உள்ளன என்ற பதட்டம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலும், ஈரானும் தொடர்ந்து மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்கள், அமெரிக்கர்கள், பன்னாட்டு நாட்டு மக்கள் தங்களை பாதுகாப்பதற்காக அவசரமாக சொந்த நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர். மத்திய கிழக்கு மட்டுமல்லாது, உலக நாடுகளும் இந்த நிலைமையை எச்சரிக்கையுடன் கவனித்து வருகின்றன.