
மதுரை பாண்டிக்கோவில் சாலையில் அமைந்துள்ள அம்மா திடலில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஹிந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு விமர்சையாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமன்றி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களிலிருந்தும் ஆன்மிகவாதிகள், அரசியல் தலைவர்கள், ஆதீனங்கள் மற்றும் முருக பக்தர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர். இதன் சிறப்பு விருந்தினராக ஆந்திர துணை முதல்வர் மற்றும் ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் பங்கேற்றார்.
மாநாட்டில் உரையாற்றிய தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, “இது ஒரு சாதாரணக் கூட்டம் அல்ல. ஒரு இனம் தனது உரிமைக்குரிய குரலை எழுப்பும் விழிப்புணர்வு கூட்டமாக இது அமைந்துள்ளது. எங்கு சனாதன தர்மத்திற்கு ஆபத்து ஏற்பட்டாலும், அங்கு நானே இருப்பேன் எனத் தன்னம்பிக்கையுடன் பவன் கல்யாண் இங்கு வந்துள்ளார். அரசியல்வாதிகள் இன்னும் பழைய அரசியலில் சிக்கிக் கொண்டு இருக்கிறார்கள். ஆன்மிக அடிப்படையிலான ஆட்சி தமிழகத்துக்கு தேவை,” எனக் கூறினார்.
மேலும், “தமிழகத்தில் இன்று இருவகை சட்டம் நடைமுறையில் உள்ளது. இந்துக்களுக்கு ஒன்று, மற்ற மதத்தினருக்கு வேறொன்று. இந்த கொள்கையை எதிர்த்து இந்த மாநாட்டிற்கு 5 லட்சம் மக்கள் வந்துள்ளனர். இது ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கையாக இருக்கிறது,” என்று அண்ணாமலை வலியுறுத்தினார். மாநாட்டில் பவன் கல்யாண் உள்ளிட்டோர் உரையாற்றியதை தொடர்ந்து, பக்தர்கள் “முருகா முருகா” என முழக்கமிட்டனர். மாநாடு பக்தி மற்றும் அரசியல் கலந்த தளமாக அமைந்திருந்தது.