
தமிழக அரசியல் சூழலில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், நாம் தமிழர் கட்சியின் முன்னாள் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளரான தமிழ்ச்செல்வன், இன்று அதிமுகவில் இணைந்தார். இந்தச் சேர்க்கை, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமியின் முன்னிலையில் நிகழ்ந்தது. 2026 சட்டப்பேரவை தேர்தல் எதிரொலியாக, பல முக்கிய நிர்வாகிகள் கட்சி மாறும் நிலைமை உருவாகி உள்ள நிலையில், இந்தச் சம்பவம் மேலும் அரசியல் பரிணாமத்திற்கு வழிவகுக்கிறது.
முக்கியமாக, நாம் தமிழர் கட்சியில் இருந்து அண்மைக்காலமாக பலர் விலகி வருகின்றனர். இவர்களில் சிலர் திமுகவிலும், சிலர் அதிமுகவிலும், மற்றவர்கள் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர். இந்த சூழ்நிலையில், “சிலர் விலகினாலும் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. நிலை தளராத போராட்டக்கட்சி என நாங்கள் தொடர்கிறோம்” என நாம் தமிழர் கட்சியின் தலைவரான சீமான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.