மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டம் கதேகவன் கிராமத்தில் உள்ள மராத்தி மொழி பேசும் ஜில்லா பரிஷத் பள்ளியில் ஒரு அதிர்ச்சி சம்பவம் பதிவாகியுள்ளது.

சமூக ஊடகங்களில் பரவிய வீடியோவில், வகுப்பறையில் மாணவர்கள் அமர்ந்திருக்கும் போது, ஆசிரியர் வி.கே. முண்டே நாற்காலியில் கால்களை நீட்டிக்கொண்டு அமைதியாக தூங்கிக்கொண்டிருப்பது காணப்படுகிறது. வீடியோ பதிவு செய்யும் நபர்,  ஒரு மாணவரிடம் ஆசிரியர் எவ்வளவு நேரம் தூங்கினார் என கேட்க, அவர் “அரை மணி நேரம்” என்று பதிலளிக்கிறார். இந்த வீடியோ வைரலாகி, பொதுமக்களில் கடும் எதிர்வினையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மண்டல கல்வி அதிகாரி சதீஷ் ஷிண்டேவிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  அவர் “சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்துள்ளார்.

 

பள்ளி மாணவர்களின் கல்வி மற்றும் ஒழுக்கத்தில் இந்தச் செயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆசிரியரின் அலட்சியம் கல்வியின் மதிப்பை குறைக்கும் விதமாக உள்ளது என்பது சமூகத்தின் கோபத்தைக் கூட்டியுள்ளது.

இதற்கு முந்தைய ஆண்டில், உத்தரபிரதேச மாநிலம் அலிகரில் உள்ள அரசு பள்ளியில் அதேபோன்ற ஒரு சம்பவம் நடந்தது. அப்போது, வகுப்பறையில் தூங்கிக் கொண்டிருந்த ஆசிரியைகாக   மாணவர்கள் மாறி மாறி விசிறியால் காற்று வீசும்   வீடியோ வெளியானது.

அந்த வீடியோ தொடர்பாக அதிகாரிகள் “ஆசிரியை நாற்காலியில் இருந்து விழுந்ததால் உடனடி மருத்துவ உதவி தேவைப்பட்டு மாணவர்கள் அவருக்கு உதவ முயன்றனர்” என விளக்கம் அளித்தனர்.

இவ்வாறு தொடரும் சம்பவங்கள், அரசு பள்ளிகளில் மாணவர்களின் நம்பிக்கையையும் கல்வியின் தரத்தையும் பாதிக்கக்கூடிய நிலையை உருவாக்குகின்றன.