
தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு சுகாதாரச் சான்றிதழ் பெறுவது கட்டாயம் என அரசால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.
இதற்கான நடைமுறை தற்போது மாற்றப்பட்டுள்ளது. இனிமேல், சுகாதாரச் சான்றிதழ் பெற விரும்பும் அனைவரும் தமிழ்நாடு அரசின் இ-சேவை இணையதளமான https://tnesevai.tn.gov.in மூலமாக விண்ணப்பிக்க வேண்டும் என தமிழக பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இதுவரை நேரடி முறையில் ஆவணங்களை சமர்ப்பித்து சான்றிதழ் பெறும் நடைமுறை நடைமுறையில் இருந்தது. ஆனால், இதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களைத் தவிர்க்கவும், பொதுமக்கள் எளிதாக சான்றிதழைப் பெறவும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை “எளிமை ஆளுமை திட்டத்தின்” கீழ் புதிய முறைமையை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, இ-சேவை தளத்தில் விண்ணப்பதாரர்கள் தங்கள் விவரங்களை உள்ளீடு செய்து, தேவையான ஆவணங்களை மற்றும் சுய உறுதிமொழி சான்றிதழை பதிவேற்றம் செய்தவுடன், சுகாதாரச் சான்றிதழ் தானாகவே உருவாக்கப்பட்டு பதிவிறக்கம் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
சான்றிதழ் 1 வருடம் காலம் செல்லுபடியாகும் வகையில் வழங்கப்படும். மேலும், அந்த சான்றிதழை சம்பந்தப்பட்ட வளாகத்தில் கட்டாயமாக காட்சிப்படுத்த வேண்டும். சுகாதாரச் சான்றிதழ் பெறும் நிறுவனங்கள், அதில் குறிப்பிடப்படும் நெறிமுறைகளை கட்டுப்பாட்டுடன் பின்பற்ற வேண்டும். அதிகாரிகள் எந்த நேரத்திலும் திடீர் ஆய்வுக்குச் செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. ஆய்வின்போது நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றால், சான்றிதழ் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக, இனிமேல் சுகாதாரச் சான்றிதழ் பெறுவதற்கான நேரடி முறையை அரசு அமல்படுத்தியுள்ளது. ஆவணங்களை நேரில் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமின்றி, முழுமையாக ஆன்லைன் முறையில் இ-சேவை தளத்தின் வாயிலாகவே சான்றிதழ் பெற புதிய முறையை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.