டெல்லி-போபால் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த ராஜ் பிரகாஷ் என்பவர், ஜன்னல் சீட்டில் அமர்ந்திருந்தார். அதே ரயிலில் பாபினா தொகுதி பாஜக எம்.எல்.ஏ ராஜீவ் சிங், அவரது மனைவி கம்லி சிங், மகன் ஷ்ரேயன்ஷ் சிங் ஆகியோரும் பயணம் செய்தனர். ராஜீவ் சிங்குக்கு 8-வது சீட், மனைவிக்கும் மகனுக்கும் 50, 51-வது சீட்டுகள் இருந்த நிலையில், 49-வது விண்டோ சீட்டில் அமர்ந்திருந்த ராஜ் பிரகாஷிடம், குடும்பத்துடன் அருகே அமர சீட் மாற்றம் கோரியதாக கூறப்படுகிறது. ராஜ் பிரகாஷ் அதை மறுத்த நிலையில், ரயில் ஜான்சி சென்றடைந்ததும் 7–8 பேர் கும்பலாக ரயிலுக்குள் நுழைந்து அவரை தாக்கினர். இதில் அவருக்கு மூக்கில் ரத்தம் வந்த நிலையில் சக பயணிகள் அவருக்கு உதவி செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து முன்னாள் மத்தியப்பிரதேச அமைச்சர் ராம் நிவாஸ் ராவத் X தளத்தில், “7–8 பேர் கோச்சுக்குள் நுழைந்து பயணியை கடுமையாக தாக்கினர். சில போலீசாரும் அவர்களுக்கு உதவினர்” எனக் குறிப்பிட்டுள்ளார். தாக்குதலுக்குப் பிறகு எம்.எல்.ஏ. ராஜீவ் சிங் விளக்கமளிக்கையில், “49 மற்றும் 52 சீட்களில் இருந்த பயணிகள் தவறாக உட்கார்ந்திருந்தனர். என் மனைவிக்கு சிரமம் ஏற்படுத்தியதால், நான் மரியாதையுடன் கூறியபோதும், அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். என் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டி  நிலைக்கு நான் சென்றேன்” எனத் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில், 15–20 பேர் கோச்சுக்குள் நுழைந்து ராஜ் பிரகாஷை வன்முறையாக தாக்கியதாக மற்ற பயணிகள் கூறினர். போலீசாரின் முன்னிலையில் தாக்குதல் நடந்தும், அவர்கள் எதையும் செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ராஜீவ் சிங் ஜான்சி GRP காவல் நிலையத்தில் ராஜ் பிரகாஷ் உள்ளிட்ட இருவருக்கு எதிராக புகார் அளித்துள்ளார். மேலும் இந்த தாக்குதல் சம்பவம் சமூக வலைதளங்களில் பரவலாக பரவி, வன்முறைக்கு எதிராக பயணிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.