சாலையில் செல்பவர்களின் பாதுகாப்பை கவனிக்காமல் எடுத்த ஒரு முடிவு, ஒருவரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிறிது கவனக்குறைவால் நிகழ்ந்த இந்த விபத்து, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது சாலையின் ஓரமாக ஒரு கார் நிறுத்தப்பட்டிருந்தது. காரில் இருந்த நபர், இடது மற்றும் வலது பக்கத்தையும் சரிவர பாராமல், கதவை திடீரெனத் திறந்தார். அதே நேரத்தில், சைக்கிளில் வந்த ஒருவர் அங்குப் புறப்பட்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது கார் கதவு திறந்ததால் அதில்  மோதி, சைக்கிள் ஓட்டுநர் சாலையில் தவறி விழுந்தார்.

அந்த சமயத்தில் , பின்னால் வந்த வேகமான ஒரு கார் அவர் மீது  மோதியது. இந்த பயங்கரமான காட்சி, ‘Deadly Kalash’ என்ற எக்ஸ் கணக்கில் ஜூன் 18ஆம் தேதி பதிவேற்றப்பட்ட வீடியோவில் பதிவாகியுள்ளது. தற்போது இது 45,000-க்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.

 

சைக்கிள் ஓட்டுநர் நிலத்தில் விழுந்ததற்குப் பிறகு, அவரை மோதி சென்ற கார் ஓட்டுநர் தப்பியோடியதாகவும், அருகிலிருந்தவர்கள் யாரும் அந்த காரை நிறுத்த முயற்சிக்காததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொடூர சம்பவம் பலரிடம் கோபத்தையும் வருத்தத்தையும் கிளப்பியுள்ளது.

பல பயனர்கள், இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட நபருக்காக தங்கள் வருத்தத்தையும், காரில் இருந்த நபரின் அவசரத்தைப் பற்றி கடும் கண்டனங்களையும் பதிவு செய்து வருகின்றனர். “இது ஒரு குற்றம், அந்த நபர் தண்டிக்கப்பட வேண்டும்” என்றும், “கதவைத் திறக்கும் முன் சுற்றுப்புறத்தை சோதிக்க வேண்டும்” என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளார்.

கார் கதவைத் திறப்பதற்கு முன்பு, இடது மற்றும் வலது பக்கங்களில் பாதசாரிகள், இருசக்கர வாகனங்கள் வருகிறார்களா? என்பதை நன்கு கவனிக்க வேண்டும். அந்த சிறிய கவனக்குறைவால், இன்னொருவருக்கு உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்பதே கவலையளிக்கிறது.

சாலையில் ஒருவர் மேற்கொள்ளும் சிறிய தவறு, மற்றொருவருக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தக் கூடும். எனவே, , கார் கதவை திறக்கும் முன் நிச்சயமாக சுற்றுப் பக்கங்களை கவனித்த பிறகே இறங்க வேண்டும். இது சாலையில் பயணிக்கும் அனைவரின் பாதுகாப்பிற்கும், உங்களது பொறுப்புள்ள தன்மைக்கும் முக்கிய அடையாளமாகும்.