பெங்களூருவைச் சேர்ந்த இரு குழந்தைகளின் தாயான 38 வயது பெண்ணிடம், குடும்ப பிரச்சனைகளுக்கு தீர்வாக மாந்த்ரீக பூஜை செய்ய வேண்டும் எனக் கூறி, நிர்வாணமாக வர கட்டாயப்படுத்தி, பின்னர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கேரளாவைச் சேர்ந்த இரு அர்ச்சகர்கள் செய்த செயலால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

பெல்லந்தூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் கணவரை இழந்த பெண் தனது குழந்தைகளை தனியாக வளர்த்து வருகிறார். வாழ்க்கையில் ஏற்பட்ட தொடர்ச்சியான நெருக்கடிகள் காரணமாக மன உளைச்சலில் இருந்த அவர், இன்ஸ்டாகிராமில் பார்த்த ஒரு வீடியோ மூலம் கேரளாவிலுள்ள ஒரு கோயிலில் மாந்த்ரீக பூஜை செய்தால் வாழ்க்கை சீராகும் என நம்பி, நேரில் அந்த கோயிலுக்குச் சென்றார்.

அங்கு சந்தித்த அர்ச்சகர் அருண், அவருக்கும் அவரது குழந்தைகளுக்கும் பில்லி, சூனியம் செய்யப்பட்டுள்ளதாக கூறி ரூ.24,000 கட்டணமாக கூறியுள்ளார். பணத்தை ஏற்பாடு செய்ய பெண் பெங்களூருக்குத் திரும்ப, அவர் செல்லும் முன் அருணுக்கு தனது மொபைல் எண்ணை வழங்கினார்.

அதனை தொடர்ந்து வீடியோ அழைப்பில் அருண், “மாந்த்ரீக பூஜை செய்ய வேண்டுமெனில் நிர்வாணமாக நிற்கவேண்டும்” என வற்புறுத்தியுள்ளார். பில்லி சூனியத்தால் குழந்தைகள் உயிரிழக்கலாம் என மிரட்டியதையடுத்து, குழந்தைகளுக்காக அந்த பெண் ஒப்புக்கொண்டு வீடியோ அழைப்பில் நிர்வாணமாகக் காணப்பட்டுள்ளார். அருண் அதை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

பின்னர் அந்த பெண்ணை கேரளாவிற்கு அழைத்து, பூஜை செய்வதுபோல் பாவனை செய்த அருண் மற்றும் மற்றொரு அர்ச்சகர் உன்னி தாமோதரன், அவரை ஒரு தனியான இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு, “உடலுறவாக இருந்தால்தான் பூஜை வெற்றிகரமாக முடியும்” என கூறி பாலியல் உறவுக்கு கட்டாயப்படுத்தியுள்ளனர். பெண் மறுத்ததும் அவரிடம் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்து, வன்முறையாக நடந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இத்தனை சோதனைகளுக்குப் பிறகு பெண் பெங்களூருக்கு திரும்பி, பெல்லந்தூர் போலீஸில் புகார் அளித்துள்ளார். நிர்வாண வீடியோவை காட்டி தொடர்ந்த மிரட்டலுக்கும் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் அர்ச்சகர் அருணை போலீஸார் கைது செய்து, அவரது செல்போனை பறிமுதல் செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள உன்னி தாமோதரனை போலீஸார் தேடி வருகின்றனர்.”