ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தில், வீரு ஜாதவ் என்பவர் கடந்த ஜூன் 8ஆம் தேதி இரவு மர்மமான முறையில் மரணம் அடைந்தார். தொடக்கத்தில் இயற்கை மரணம் எனக் கருதப்பட்ட இந்த சம்பவம், பின்னர் போலீசாரின் தீவிர விசாரணையில் கொலை என உறுதி செய்யப்பட்டது. இந்த கொலைக்கு வீருவின் மனைவி அனிதா மற்றும் அவரது காதலன் காஷிராம் நேரடியாக தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலின்படி, அனிதா தனது காதலன் காஷிராமுடன் சேர்ந்து, தனது கணவனை கொல்ல நான்கு இளைஞர்களுக்கு ரூ.2 லட்சம் பணம் கொடுத்துள்ளார். காஷிராம், அனிதாவின் கடைக்கு முன்பு கச்சோரி வண்டி வைத்து வியாபாரம் செய்து வந்த நிலையில் இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டது.  இவர்கள் இருவரும் நெருங்கி பழகி உல்லாசமாக இருந்த நிலையில் பின்னர் அனிதா தன் கணவனை பிரிய திட்டமிட்டார்.

சம்பவம் நடந்த அன்று இரவு, வீரு தூங்கிக் கொண்டிருந்தபோது, காஷிராம் நான்கு பேருடன் அவரது வீட்டிற்குள் புகுந்து, கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார். அதே நேரத்தில் அனிதா அருகிலேயே இருந்தும்,  நடந்ததை தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். காலை நேரத்தில், வீருவுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், உடலில் காணப்பட்ட காயங்களை வைத்து குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.

பின்னர் போலீசார் 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து, இந்த கொலையை அம்பலப்படுத்தினர். தற்போது அனிதா, காஷிராம் மற்றும் விஸ்வேந்திர ஜாதவ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கள்ளக்காதல் சம்பவங்களால் கணவனை கொல்லும் சம்பவங்கள் குறித்த செய்திகள் அடிக்கடி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.