
இஸ்ரேல்- ஈரானுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. அதாவது அணு ஆயுத தயாரிப்பில் ஈரான் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக இஸ்ரேல் பாதுகாப்பு கருதி ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரானும், இஸ்ரேல் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனிடையே வட கிழக்கு தெஹ்ரானில் உள்ள ஷாஹித் சாம்ரான் நோபோனியாட் குடியிருப்பு பகுதியில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் உயிரிழந்த 60 பேரில் 29 பேர் குழந்தைகள் என கூறப்படுகிறது. மேலும் அந்தத் தாக்குதலில் ஈரான் டேக்வாண்டோ கூட்டமைப்பு உறுப்பினர்கள் 3 கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அதில் மிகவும் முக்கியமான டீனேஜ் நட்சத்திரமும் நாட்டின் எதிர்கால டேக்வாண்டோ நம்பிக்கையுமான வீரர் அமீர் அலி அமினியும் கொல்லப்பட்டுள்ளார். ஈரானின் திறமையான அர்ப்பணிப்புள்ள இளம்வீரர் அமீர் அலி அமினி. இவர் தேசிய மற்றும் சர்வதேச அரங்குகளில் ஈரானிய டேக்வாண்டோவின் எதிர்காலமாக கருதப்பட்டார்.
இச்சம்பவம் ஈரானிய விளையாட்டு வீரர்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தெஹ்ரானில் நடைபெற்ற வான்வழி தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களில் அமினியும் ஒருவர். ஆனால் அவரது மரணத்தின் சரியான இடம் மற்றும் சூழ்நிலைகள் பற்றி விவரங்களை ஈரானிய அரசு இதுவரை வெளியிடவில்லை.
மேலும் இளம் நட்சத்திர வீரரான அமீர் அலி யின் மரணத்திற்கு பல விளையாட்டு வீரர்கள் பயிற்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.