
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெரியதாழை அருகே பனை மரத்தில் ஏறி கள் இறக்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். விவசாயிகள் நலன் கருதியும், மரம் ஏறும் தொழிலாளர்கள் நலன் கருதியும் கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டது.
இருப்பினும் அந்த கோரிக்கைக்கு முக்கிய அரசியல் கட்சிகள் ஆதரவு கொடுக்கவில்லை. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கள் இறக்க அனுமதி கொடுக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார். இன்று பெரியதாழை அருகே பனை மரத்தில் ஏறி கள் இறக்கி போராட்டம் நடத்த போவதாக சீமான் ஏற்கனவே அறிவித்தார்.
அதன்படி இன்று கட்சி நிர்வாகிகளுடன் அங்கு சென்று பனைமரத்தில் ஏறி கள் இறக்கி அதை அங்கிருந்தவர்களுக்கு கொடுத்தார். இந்த போராட்டத்தில் பலர் பங்கேற்று கோஷம் எழுப்பியுள்ளனர்.
இதனையடுத்து சீமான் கூறியதாவது, வனத்தில் மேய்ச்சலுக்கு தடை விதிப்பதை எதிர்த்து ஜூலை 10ஆம் தேதி ஆடு மாடுகளின் மாநாடு நடத்த போகிறேன். அதில் தீர்வு கிடைக்கவில்லை என்றால் 3000 ஆடு, மாடுகளை திரட்டிக்கொண்டு நானே மேய்க்க செல்வேன் என கூறியுள்ளார்.