அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த 35 வயதான டிரான் அலெக்சாண்டர் என்ற நபர், விமானப் பணிப்பெண்ணாக நடித்துக்கொண்டு கடந்த ஆறு ஆண்டுகளில் 120க்கும் மேற்பட்ட இலவச விமான டிக்கெட்டுகளை மோசடியாக பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

கடந்த 2018 முதல் 2024 வரை, அமெரிக்கன் ஏர்லைன்ஸ், டெல்டா, யுனைடெட் ஏர்லைன்ஸ், ஸ்பிரிட் மற்றும் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட விமான நிறுவனங்களின் ஊழியர் சலுகைகளை பயன்படுத்தி பயணங்களை முன்பதிவு செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த அமெரிக்க கூட்டாட்சி நடுவர் நீதிமன்றம் அவருக்கு தண்டனை விதித்துள்ளது.

விமானக் குழுவினருக்காக ஒதுக்கப்பட்ட இணையதளங்களைப் பயன்படுத்தி, அலெக்சாண்டர் பயண டிக்கெட்டுகளை பெற்றுள்ளார். அவர் பல்வேறு நிறுவனங்களில் விமானப் பணிப்பெண் என்ற பெயரில் போலியான பெயர்கள், பேட்ஜ் எண்கள், பயண தேதிகளை பயன்படுத்தியுள்ளார்.

ஒரு நிறுவனத்தில் மட்டும் அவர் 34 விமான பயணங்களை மேற்கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது. உண்மையில், அவர் ஒரு விமான பணிப்பெண்ணாகவோ அல்லது பயண ஊழியராகவோ வேலை செய்யவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அலெக்சாண்டருக்கு தற்போது கம்பி மோசடி மற்றும் தவறான சாட்சியங்களை பயன்படுத்தி விமான நிலைய பாதுகாப்பு பகுதிகளில் நுழைந்ததற்கான குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளன.

இந்த குற்றங்களுக்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ₹2.15 கோடி ($250,000) அபராதமும் விதிக்க முடியும். TSA (போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம்) வெளியிட்ட அறிக்கையில், பயணத்தின்போது தேவையான உடல் பரிசோதனை மற்றும் ID சரிபார்ப்பு ஆகியவை நடத்தப்பட்டதால் பொதுமக்கள் பாதுகாப்பு பாதிக்கப்படவில்லை என்றும், விமான பயண சட்டங்களை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.