
அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், துப்ரி மாவட்டத்தில் சமீபத்தில் மதரீதியான பதற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதாவது அசாம்- வங்கதேச எல்லையை ஒட்டிய துப்ரியில் அனுமான் கோவில் அருகே மாட்டுத்தலை கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து கல்வீச்சு போன்ற மத ரீதியிலான தூண்டுதல்கள் அதிகரித்து வருகிறது.
இதனை கட்டுக்குள் கொண்டுவர இரவில் வன்முறையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் மாலை 6 மணிக்கு பிறகு கண்டதும் சுடப்படுவார்கள் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் பிஸ்வா செய்தியாளர்களிடம் கூறியதாவது, சட்ட ஒழுங்கை நிலைநாட்ட விரைவு அதிரடிப்படை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை தொடர் கண்காணிப்பில் ஈடுப்படுவார்கள்.
மாட்டிறைச்சி கடத்தல் மற்றும் வங்கதேச சக்திகளின் தூண்டுதல்களே இது போன்ற மத ரீதியான பதட்டங்களுக்கு காரணம். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது ஜாமினில் வெளிவர முடியாதபடி பிடிவாரண்டுகள் பிறப்பிக்கப்படும்.
மேலும் மாலை 6:00 மணிக்கு மேல் இரவு நேரங்களில் இது போன்ற வன்முறையில் ஈடுபடுபவர்களை பார்த்த இடத்திலேயே சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி குற்றவாளிகளை கண்டறிய ஒத்துழைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகிறார்கள் என தெரிவித்தார்.