
கேரள மாநிலம் கொச்சி கடற்கரையில் லைபீரியாவை சேர்ந்த MSC ELSA-3 என்ற சரக்கு கப்பல் கடந்த நாட்களில் மூழ்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் ஏற்பட்ட எண்ணெய் கசியல் உள்ளிட்ட சுற்றுச்சூழல் மாசுபாடுகளை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசு சேர்ந்து கோடிக்கணக்கில் செலவழித்து வருகின்றன. இதனால் பொது நிதி பாதிக்கப்படுவதாக கேள்வி எழுந்துள்ள நிலையில், கேரள உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையீடு செய்து, “மாசுபாட்டுக்கான செலவுகளை கப்பல் நிறுவனத்திடம் இருந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மாநில அரசுக்கு கட்டளையிட்டுள்ளது.
இந்த வழக்கில், முதலில் ஒரு மீனவர் புகார் கொடுத்ததிலிருந்து தான் அரசு நடவடிக்கைக்கு முனைந்ததாக நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது. மேலும், காங்கிரஸ் எம்.பி. டி.என். பிரதாபன் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் விசாரணை நடந்தபோது, மீன்வளத் துறையும், சுற்றுச்சூழலும், பொருளாதாரத்துறையும் சந்தித்த இழப்புகளுக்காகவும் கப்பல் நிறுவனத்திடம் நஷ்டஈடு கேட்க வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசு இரண்டும், இந்த விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முழுமையான அதிகாரம் பெற்றுள்ளதாகவும் நீதிமன்றம் கூறியுள்ளது.