
தமிழகத்தில் ராஜ்ய சபா தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக சார்பில் 2 பேரும் திமுக சார்பில் நான்கு பேரும் போட்டியிடுகிறார்கள். திமுகவின் கூட்டணி கட்சி தலைவர் ஆன கமல்ஹாசனுக்கு ஒரு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அதிமுக சார்பில் தனபால் மற்றும் இன்பதுரை ஆகியோர் போட்டியிடும் நிலையில் இவர்கள் அனைவரும் போட்டியின்றி தேர்வாக வாய்ப்புள்ளது. ஆனால் தற்போது திண்டுக்கலை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் அதிமுக வேட்பாளர்களின் வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என மனு கொடுத்துள்ளார்.
அதாவது இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அதிமுக வேட்பாளர்களின் மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி கையொப்பமிட்டுள்ள ஏபி படிவங்களை நிராகரிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். அதோடு இவர் தேர்தல் நடத்தும் அதிகாரி சுப்பிரமணியனை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இதே போன்று அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தியும் அதிமுக வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளக்கூடாது என புகார் கொடுத்துள்ளார்.