மகாராஷ்டிராவின் சந்திரபூர் மாவட்டத்தில் உள்ள விசாபூர் டோல் பிளாசாவில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. டோல் கட்டணம் செலுத்தாமல் சென்ற பிக்கப் வேன், அதைத் தடுத்து நிறுத்த முயன்ற டோல் பணியாளர் மீது மோதியது.

இந்த கோர சம்பவம் அருகிலுள்ள சிசிடிவி காமிராவில் பதிவாகி, அதற்கான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  பல்லார்ஷா நோக்கி சென்ற டாடா ஏஸ் வகை வாகனம், டோல் கட்டணத்தை தவிர்க்க டோல் சோதனை கோட்டை மீறிச் சென்றது.

இதைக் கவனித்த டோல் பணியாளர் சஞ்சய் அருண் வஞ்சாரே (வயது 27), அந்த வாகனத்தை நிறுத்த விரைந்து சென்று சைகை காட்டினார். ஆனால் வாகன ஓட்டுநர் பணியாளரை மோதியபடியே நகர்ந்துள்ளார். இந்த மோதலில் சஞ்சய் வஞ்சாரே பலத்த காயமடைந்தார்.

உடனடியாக அவர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வாகன ஓட்டுநர் முறையான வழியாகச் செல்லாமல் தடை கோட்டை மீறியதோடு, எச்சரிக்கை செய்த பணியாளரின் மீது வாகனம் ஓட்டியுள்ளார் என போலீசார் உறுதி செய்துள்ளனர். தற்போது அந்த வாகன ஓட்டுநரை கைது செய்ய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.