
மதுரை வந்த தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அதன் பின் அவர் கூறியதாவது, மதுரை சங்கம் வைத்து தமிழை வளர்த்த இடம் அதனால் எங்களை சங்கிகள் என்கிறார்கள். அது குறித்து கவலைப்படவில்லை. சங்கம் வைத்த இடத்தில் சங்கிகளின் சக்தி அதிகமாக இருக்கிறது. மதுரையில் இன்று பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் மத்திய அமைச்சர் பங்கேற்பது உற்சாகமளிக்கிறது.
அவர் புது நிர்வாகிகளுக்கு புது ரத்தம் பாய்ச்ச உள்ளார். அவரது வருகை திமுகவிற்கு பதட்டத்தை ஏற்படுத்தும். உண்மையான திமுகவினருக்கு பக்தி இருக்கிறது. அமைச்சர் துரைமுருகன் என அனைவருமே கடவுளை ரகசியமாக வழிபடுகின்றனர். தமிழகத்தில் 3000 கோயில்களில் நடந்த கும்பாபிஷேகங்களில் ஒன்றிலாவது முதலமைச்சர் பங்கேற்றாரா?. கோவிலில் உள்ள தீபத்திற்கும் ஸ்டிக்கர் ஒட்டுகிறார்கள். இதை கடவுள் கூட மன்னிக்க மாட்டார்.
திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெய்குமார் கொலை செய்யப்பட்டு 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை திமுக கூட்டணியில் இருந்து கொண்டு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையால் எந்த ஒரு கண்டன போஸ்டரும் ஒட்ட முடியவில்லை. கண்ணகியால் நீதி கிடைத்த மண், மதுரை 2026 இல் தமிழக மக்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று அவர் கூறினார்.