
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே திருத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முரளி. இவருக்கு இரு குழந்தைகள் உள்ளனர். கொத்தனார் வேலை செய்து வந்த முரளி, இன்று வெளிநாட்டுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார்.
இதற்காக நேற்று இரவு, தனது குழந்தைகளுக்காக மார்த்தாண்டம் பகுதியில் இருந்து பிரியாணி வாங்கிக் கொண்டு, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி வந்தார். அப்போது குழித்துறை சந்திப்பு பகுதியில், கனிம வளம் ஏற்றி கேரளா நோக்கிச் சென்ற டாரஸ் லாரி, முரளியின் இருசக்கர வாகனத்தை மோதி மேலே பாய்ந்தது.
இதில் முரளி சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்து உயிரிழந்தார். தகவல் அறிந்த களியக்காவிளை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, முரளியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.