ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் மோதியது. இந்த போட்டியில் பெங்களூர் அணி வெற்றி பெற்று 18 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றிக்கு பிறகு பெங்களூருக்கு சென்ற விராட் கோலி உட்பட கிரிக்கெட் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதன் பிறகு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் திடீரென ஏராளமான ரசிகர்கள் குவிந்ததால் கட்டுக்கடங்காத கூட்டம் நெரிசல் ஏற்பட்டது.

இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 11 ரசிகர்கள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஏற்கனவே ஆர்சிபி அணி நிர்வாகிகள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது கப்பன் பார்க் காவல் நிலையத்தில் வெங்கடேஷ் என்பவர் விராட் கோலி மீது புகார் கொடுத்துள்ள நிலையில் அந்த புகாரை போலீசார் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே இந்த விவகாரத்தில் 2 வழக்குகள் கப்பன் பார்க் போலீஸ் ஸ்டேஷனில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் முன்பே பதிவு செய்யப்பட்ட விசாரணையுடன் சேர்த்து எஃப்ஐஆர் பதிவு செய்யப்படும் என போலீசார் உறுதி கொடுத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக கூடுதலாக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என வெங்கடேசுக்கு போலீசார் உறுதி கொடுத்துள்ளனர்.